சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு வணக்க நிகழ்வு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 27 September 2022

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு வணக்க நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 25-09-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. துங்காபியில் உள்ள பிறிகேட் கவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமானது.


பிறைக்குமரன் பேரின்பராசா மற்றும் கவிவேந்தன் பாலகுமார் ஆகியோர் நிகழ்வினை தொகுத்து வழங்க, நிகழ்வினை ஆரம்பித்துவைக்கும் முகமாக பொதுச்சுடரை இசைக்கோ தீபவர்ணன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சுதர்சன் புவனேந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரும் லெப் கேணல் பாரதிராஜ் அவர்களின் சகோதரர் ஜெகநாதன் ஞானமுத்து அவர்கள் ஏற்றிவைத்தார்.


தொடர்ந்து, 26-09-1987 அன்று ஈகைச்சாவெய்திய லெப் கேணல் திலீபன், 26-09-2001 அன்றில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் (முகிலன்) மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயு (குயிலன்) ஆகியோர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட பீடத்தில், தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் துளசி செல்வராசா அவர்கள் ஈகைச்சுடரேற்றினார்.


அதனைத் தொடர்ந்து, தமிழீழ தாயக விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், உயிர்நீத்த தமிழக உறவுகளையும், போராட்டத்தின்பால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் உறவுகளையும் நினைவில் சுமந்து, மெழுகுதிரி எரிவதைப்போல, சிறுக சிறுக தன்னை எரித்து, மக்களின் விடிவிற்காக ஒளியை பிரகாசித்தவாறு தியாகி திலீபன் அவர்களின் உன்னத தியாகத்தை மனதில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


அகவணக்கத்தை தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் வரிசையாக சென்று திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.


தியாகி திலீபன் நினைவான "அணையாத தீபமாய் அழியாத கோலமாய்" என்ற பாடலை ஜெய்கரன் அவர்கள் உணர்வுபூர்வமாக பாடினார். தொடர்ந்து அபிசயா மதிவதன் அவர்கள் தியாகி திலீபன் அவர்களின் தியாகம் பற்றி சிறு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, இனியன் சிறிகுமார் அவர்களும் திவாசினி சிவராஜ் அவர்களும் இணைந்து தியாகி திலீபன் அவர்களின் தியாகம் பற்றிய பதிவை ஆங்கிலத்தில் வழங்கினார்கள். 


தமிழ் இளையோர்களுக்கான இரண்டாவது கட்ட இணைய வகுப்புகள் 09-10-2022 அன்று ஆரம்பமாகும் என்றும் அதில் இளையோர்களை இணைந்துகொள்ளுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டு, இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரையோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.


இந்நிகழ்வுக்கு முன்னதாக காலை பத்து மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரை தமிழ் இளையோர்கள் பங்குபற்றிய அடையாள உண்ணாநோன்பும் தமிழர் வரலாறு பற்றிய அறிவூட்டல் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் இருபது வரையான இளையோர்கள் பங்குகொண்டிருந்தனர். இதில் தமிழர் வரலாறு பற்றிய புத்தகங்கள் வாசித்தல், தியாகதீபம் திலீபன் அவர்களின் தியாகம் தொடர்பான கலந்துரையாடல், படங்களுக்கு வர்ணம் தீட்டுதல், சதுரங்கம் விளையாடுதல், தமிழீழத் தேசியக்கொடி பற்றிய வரலாறும் விளக்கமும், எண்ணங்களின் எழுத்துவடிவம் என பல நிகழ்வுகள் நடைபெற்றன. அத்தோடு, மூத்த செயற்பாட்டாளர் அனா பரராஜசிங்கம் அவர்களும் கலந்துகொண்டு தமிழ் இளையோர்களுடன் கலந்துரையாடினார்.
















































































No comments:

Post a Comment

Post Bottom Ad