முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தலும் தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் 18-05-2021 செவ்வாய்க்கிழமையன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
கங்கேரியன்
சமூகநிலையமண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்
செல்வன் பவித்திரன் சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், பொதுச்சுடரினை முள்ளிவாய்க்கால்
பேரவலங்களை சந்தித்து மீண்டுவந்த செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அவுஸ்திரேலியத்
தேசியக்கொடியை தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவின்
செயற்பாட்டாளர் திரு. ரமேஷ் பாலா அவர்கள் ஏற்றிவைக்க,
தமிழீழத் தேசியக்கொடியை
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்
திரு. தயாபரன் மகாலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
முள்ளிவாய்க்கால்மண்ணில்
சிங்களப்படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக வடிவமைக்கப்பட்ட நினைவுப்பீடத்திற்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து மீண்டுவந்த மற்றுமொரு சகோதரி செல்வி காவேரி ஜெயக்குமார் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் நினைவுப்பீடத்திற்கு உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து
"முள்ளிவாய்க்கால்மண்ணே
வணக்கம்......." என்ற பாடலுக்கு மெல்பேர்ண்
நடனாலயாப்பள்ளி மாணவிகளின் வணக்கநடனம் இடம்பெற்றது.
நினைவுரையை
விக்ரோறி மநில சோசலிசக்கட்சியின் பொதுச்செயலரும் நீண்டகாலமாக தமிழ்அகதிகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிவருபவருமான Liz Walsh அவர்கள்
ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அதனையடுத்து
தமிழரின் இனவிடுதலைப்போராட்டத்தை பக்கச்சார்பற்று ஆதரித்துவருபவரும் இடதுசாரிச் செயற்பாட்டாளருமான
Bashana Abeywardane அவர்கள் ஆங்கிலத்தில் தயாரித்து அனுப்பிவைத்த செய்திக்குறிப்பு
செல்வி. மது பாலசண்முகன் அவர்களால்
ஆங்கிலமொழியில் வாசிக்கப்பட்டது.
அடுத்து பல புலம்பெயர்நாடுகளில் கடந்த சில ஆண்டகளாக இளையோர்களினால் முன்னெடுத்துவரப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றியும், இறுதிநேர தனது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது தாயக தன்னார்வ அமைப்பாலும், விடுதலைப்புலிகளின் போராளிகளினாலும் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி எவ்வாறு பல பட்டினிச்சாவுகளைத் எமது தடுத்தது போன்ற விடயங்களையும், இந்த நினைவேந்தல் நிகழ்வின் அடையாளமாக தொடர்ந்து இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி பேணப்படுவதன் முக்கியத்துவத்தையும் பவித்திரன் சிவநாதன் விளக்கினார்.
இறுதியாக
தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 7.30 மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவேந்தல்நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.
நிகழ்வின்
நிறைவில், முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின்போது பட்டினிச்சாவைத் தவிர்த்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவூட்டும் முகமாக அனைத்து மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUxgMKN-BaA1Br5jHgHQ_c-p_SGPPuHtz_UFxlzbSY14npaQVz6J7_WP035b4vH0aB6UayURbA-5xNENMnXYsvYtdqjqFLhYavuZrpUTipC3gYROz6gksvYiTzg5iaFMxauyLb1MDlIpo/s16000-rw/viber_image_2021-05-20_12-03-11.jpg)
No comments:
Post a Comment