சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற “ஏதிலிகளுக்கான நீதி” பேரணி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 20 March 2022

சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற “ஏதிலிகளுக்கான நீதி” பேரணி


அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அனைவருக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.


அனைத்து சமூகங்களின் பொதுவான பேரணியாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்மக்கள் சார்பாக இரண்டு பேரூந்துகளில் சென்றும் நேரடியாக பலர் வந்தும் கலந்துகொண்டிருந்தனர். 


மதியம் 2 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு நிகழ்வு Sydney Town Hall இல் ஆரம்பித்து நகரின் பல பகுதிகள் ஊடாக பேரணியாக சென்று மாலை 4 மணியளவில் Circular Quay இல் நிறைவு பெற்றது.


இப்பேரணி தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


சிறிலங்காவில் இனவழிப்பை எதிர்கொள்ளும் தமிழர்களின் அடக்குமுறை வாழ்வு ஒருபுறமும் அவுஸ்திரேலிய மண்ணிற்கு அகதியாக தஞ்சம் அடைந்தவர்களுக்கு நீதியான அணுகுமுறை காட்டப்படாமல் ஒடுக்கப்படுவது இன்னொரு புறமுமாக தமிழ் ஏதிலிகளின் எதிர்காலம் நெருக்கடியில் உள்ளது.


1. தமிழ் ஏதிலிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு வீசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் நிச்சயமற்ற எதிர்காலத்தில் தமிழ் ஏதிலிகள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.


2. இன்றும் தொடரும் தடுப்பு முகாம் வாழ்க்கையில் பல தமிழ் ஏதிலிகள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.


3. உரிய முறையில் ஏதிலிகளின் விண்ணப்பங்கள் ஆராய படாமல்,  நிராகரிக்கப்பட்டு வருவதால் பல தமிழ் ஏதிலிகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.சிலர் தற்கொலையும் செய்து உள்ளார்கள்.


4. சிறிலங்காவில் தொடரும் இனவழிப்பு நடவடிக்கைகளால் இன்னமும் பாதுகாப்பான சூழல் இல்லை எனவும் அவர்களுக்கு ஏதிலி தஞ்சம் கொடுக்கப்படவேண்டும் எனவும் தனது உறுப்பு நாடுகளை ஐநா மனித உரிமை ஆணையாளர் கேட்டுக்கொண்டிருக்கின்ற போதும் உரிய நீதியான அணுகுமுறை பின்பற்றப்படாமல் அகதி விசா நிராகரிக்கப்பட்டு பலர் நாடு கடத்தப்படுகிறார்கள்.


5. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய பலர் தமிழர் இனவழிப்பின் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அதற்கான நீதி விசாரனணக்காக இந்த தமிழ் ஏதிலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.


6. தற்காலிக விசாவில் உள்ள தமிழ் ஏதிலிகள் நிரந்தர தொழில் வாய்ப்பையோ அல்லது நிரந்தர எதிர்காலத்தையோ அமைத்துக் கொள்ள வாய்ப்பு மறுக்கப்படுகிறது.


7. தற்காலிக விசாவில் உள்ள தமிழ் ஏதிலிகள் தங்களது குடும்பத்தை இங்கு வரவழைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.


8. தற்காலிக விசாவில் உள்ள தமிழ் ஏதிலிகள் பல வருடங்களாக வேலை செய்து வரி கட்டி வருகின்ற போதும் அவர்களின் பிள்ளைகளின் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு சர்வதேச மாணவர்களைப் போல முழுமையான கட்டணம் செலுத்தப்பட்ட தன் பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. நிரந்தர விசா இல்லாத விசேட தேவைகள் உள்ள பிள்ளைகள் மருத்துவ சேவைகளை (Disability services) பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. நிரந்தர விசா இல்லாத சிறப்பு தேர்ச்சி அடையும் மாணவர்களின் NAPLAN கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றது.


9. தற்காலிக விசாவில் உள்ள தமிழ் ஏதிலிகள் பலர் தமது இளமைக் காலத்தைத் தொலைத்து,  தமது எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ, திருமணம் செய்து தமது எதிர்கால துணையை அழைத்து வரவோ முடியாதவர்களாக அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறார்கள்.


10. இந்த நாடு வளங்களால் நிறைந்தது இங்கு பலர் வந்து குடியேற வேண்டிய தேவை இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது. மிகவும் வினைத்திறனான மனிதவளமாக  ஏதிலிகள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நிரந்தர விசா வழங்குவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.


இவற்றை கருத்திற்கொண்டு அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்கவேண்டியது அவுஸ்திரேலிய அரசின் கடமையாகும்.


- என்றுள்ளது.


































1 comment:

  1. தமிழ் ஈழம் வெல்லும்

    ReplyDelete

Post Bottom Ad