மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ மாவீரர்நாள் 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 28 November 2023

மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ மாவீரர்நாள் 2023



தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒருசேர நினைவு கூருகின்ற தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. Burwood East Burwood Reserve மைதானத்தில்  27-11-2023 திங்கட்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வானது, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. றகு.கிருஷ்ணபிள்ளை மற்றும் இளைய செயற்பாட்டாளர் செல்வி லக்சிகா கண்ணன் ஆகியோர்களின் தலைமையில் மிகவும்  உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை ஓய்வுபெற்ற மருத்துவரும் மூத்த தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளருமான திரு. ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர்களான லெப். கேணல் ஆரம்பன், மேஜர். அருண் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரன் திரு. கவிப்பிரியன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


அதனைத் தொடர்ந்து  அகவணக்கம் இடம்பெற்றது. 


முதன்மைச்சுடரை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்தசெயற்பாட்டாளர் திரு. றமேஸ் பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, தாயக விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியாகிய லெப். சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு, மாவீரர் லெப். கீரன் அவர்களது தாயார் திருமதி பூரணம் சின்னத்தம்பி அவர்களும் முதற் பெண்மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் வீரவேங்கை ஈழப்பிரியன் அவர்களின் மைத்துனி திருமதி. விநோதினி நடேசானந்தன் அவர்களும் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தார்கள். சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய மாதிரி வடிவக் கல்லறைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உரித்துடையோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தனர். அதேநேரத்தில் துயிலுமில்லம்பாடலும் ஒலிக்க மக்கள் அனைவரும் அந்தப் பாடலோடு ஒன்றித்திருந்தனர். 


அடுத்து மலர் வணக்கம் இடம்பெற்றது. 


அடுத்து உறுதியுரையும் அதனைத் தொடர்ந்து மாவீரர் வணக்க நடனமும் இடம்பெற்றது. "கல்லறைமேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே ........" என்ற பாடலுக்கு நடன ஆசிரியை திருமதி. மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் மெல்பேர்ண் நடனாலாயாப்பள்ளி மாணவிகள் வணக்க நடனத்தை அரங்கேற்றினார்கள்.


அடுத்ததாக செல்வி. லோஜிதா அவர்களது "மாவீரம் தமிழீழ மண்ணின் மகுடம்" என்ற தலைப்பிலான பேச்சு இடம்பெற்றது.  


அடுத்து மாவீரர் நினைவுகளைச் சுமந்த கவிதை இடம்பெற்றது. இதனை செல்வி. றியா புஸ்பராசா அவர்கள் நிகழ்த்தினார்.


அதனையடுத்து மற்றுமொரு பேச்சு இடம்பெற்றது. "வணங்குகின்றோம் மாவீரர்களே..." என்ற தலைப்பில் செல்வி டாறிக்கா தர்மகீர்த்தி அவர்கள் இந்தப் பேச்சை வழங்கினார்.   


அடுத்து மாவீரர் நாள் நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கொற்றவன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் " நோர்வே அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சமாதான காலப்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர்  விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களை தாக்கியழித்த சமபவங்களையும்  அந்த இரண்டு சம்பவங்களிலும்  வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும் நினைவுகூர்ந்து, அவ்வாறு மாவீரர்கள் அனைவரும் இவ்வாறு செயற்கரிய தியாகத்தை புரிந்தவர்கள்" என தனது நினைவுரையை நிகழ்த்தியிருந்தார்.


இறுதியாக சமூக அறிவித்தல்களையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு முடிவுரை உறுதிமொழியுடன் இரவு 8.00மணிக்கு தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.


மெல்பேர்ண் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்ற பெருந்திரளான தமிழ் மக்கள் வருகைதந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தியிருந்தார்கள். 


இந்நிகழ்வில் தமிழீழ தாயகத்தில் பாடல்வரிகளை எழுதி, அங்கேயே இசையமைத்து சில பாடல்களையும், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை இணைத்து இன்னும் சில பாடல்களையும் கோர்வையாக்கி, தியாகத் திருவொளிகள் - 2 என்ற பாடற்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது.


அத்தோடு வழமைபோல, மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன் இவ்வாண்டும் மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது.






















































No comments:

Post a Comment

Post Bottom Ad