தமிழர் இனவழிப்பு நினைவு நாளானது தெற்கு அவுஸ்திரேலியாவில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய நினைவுகள் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வானது, 18-05-2025 அன்று அடெலெயிட் மாநகரில் நடைபெற்றது.
மாலை 6:20 இற்கு ஆரம்பமான இந்நிகழ்வானது, பொதுச்சுடரேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது, தெற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்களான இலங்கைத் தமிழ்ச் சங்கம், அடிலைட் தமிழ்ச் சங்கம் , அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், மக்கள் நலன் காப்பகம் - அவுஸ்திரேலியா, தமிழர் விடுதலை நடுவம், தமிழ் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தமிழ்ப் பாடசாலையின் அதிபர் ஆகியோர் பொதுச்சுடரை ஏற்றி வைத்தனர்.
அதனை தொடர்ந்து, தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அவுஸ்திரேலியத் தேசிய கொடியினை மத்திய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. டோனி சாப்பியா ஏற்றி வைத்தார். பூர்வகுடி மக்களின் கொடியை, வூட் வில் நகர மன்ற உறுப்பினர் திரு. செந்தில் சிதம்பரநாதன் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு. ஜெயமாறன் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, ஸ்ரீலங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக ஈகைச்சுடரேற்றப்பட்டு, அனைத்து மக்களாலும் விளக்கேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உயிர் நீர்த்த அனைவருக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் கண்ணீரோடும் உணர்வுப் பெருக்கோடும் தமது அஞ்சலியை தமது உறவுகளுக்காக செலுத்தினர்.
நிகழ்வில் தலைமையுரையினை திரு. முரளிதரன் தம்பையா நிகழ்த்தினார். நினைவுரைகளை வைத்தியர் திரு. ஜெயசாகரன் புண்ணியமூர்த்தி, திரு. அண்ணாதுரை லாரன்ஸ், திரு. நித்தியானந்தன் ரீட், மற்றும் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் மருத்துவ பணி புரிந்த வைத்தியர் பிரைட்டன் பிரசாத்நாயகம் ஆகியோர் நிகழ்த்தினர் .
முள்ளிவாய்க்கால் நினைவை ஒட்டிய பாடல்களை திரு. ராஜேஷ் பாஸ்கரன் மற்றும் திரு. கார்த்திக் ஆகியோர் நெஞ்சுருக பாடியிருந்தனர்.
நிகழ்வின் இடையே முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றி செல்வி. தனார்த்தனி பாஸ்கரன் அவர்கள் மிக தெளிவாக விளக்கி சொல்லியிருந்தார்.
பிரதம அழைப்பாளர்களாக அழைக்கப்பட்ட மத்திய பாராளுமன்ற உறுப்பினர் திரு. டோனி சாப்பியா மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கனான ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் திரு. மைக்கல் ஓ கோனெல் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் இனப்படுகொலைக்கு நீதி கோரியும், இனப்படுகொலையை அவுஸ்திரேலிய அரசு அங்கீகரிக்க கோரியும், சர்வதேச விசாரணைக்ககாக அவுஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவிடக் கோரியும் , போர்க் குற்றவாளிகளுக்கு அவுஸ்திரேலியாவில் தடை விதிக்க கோரியும் , பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு மனு ஒன்று அனைத்து தமிழ் அமைப்புக்களாலும் கையளிக்கப்பட்டது.
இறுதியாக சிறப்புரையினை திரு. இளையவன்னியன் நிகழ்த்தினார்.
கொடியிறக்கத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.
No comments:
Post a Comment