தியாகதீபம் திலீபன் அவர்களின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 26-09-2025 வெள்ளிகக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. துங்காபி பிரிகேட் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.
பிருத்திகா பிரதீபராஜன் மற்றும் பிரவீணா பிரதீபராஜன் ஆகியோர் நிகழ்வினை தொகுத்து வழங்க, நிகழ்வினை ஆரம்பித்துவைக்கும் முகமாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை இளையோர் சார்பில் கவின் கீதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் றேமருதா கருணைவேந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் பிறைக்குமரன் பேரின்பராசா அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, 26-09-1987 அன்று ஈகைச்சாவெய்திய லெப் கேணல் திலீபன், 26-09-2001 அன்றில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் (முகிலன்) மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயு (குயிலன்) ஆகியோர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட பீடத்தில், இளையோர் சார்பில் துவா சங்கர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழீழ தாயக விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், போராட்டத்தின்பால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் உறவுகளையும் நினைவில் சுமந்தும், தமிழர் நிலம், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக உயிர்நீத்த தமிழக உறவுகளையும் நெஞ்சங்களில் இருத்தியும்,
மெழுகுதிரி எரிவதைப்போல, சிறுக சிறுக தன்னை எரித்து, மக்களின் விடிவிற்காக ஒளியை பிரகாசித்தவாறு உன்னத தியாகத்தை உலகிற்கு பிரசவித்த தியாகி திலீபன் அவர்களை மனதில் நிறுத்தியும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் வரிசையாக சென்று திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து, திவாசினி சிவராசா மற்றும் தஸ்வின் சிவராசா ஆகியோர் இணைந்து தியாகி திலீபன் அவர்களின் தியாகம் தொடர்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் உரை ஒன்றை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தரணிவேந்தன் பாலகுமார் அவர்கள் தியாகதீபம் திலீபன் அவர்கள் நினைவாக சிறிய கவிதையும் லவனிகா குவேந்தினர் அவர்கள் இன்னொரு கவிதையையும் வழங்கினர்.
அதன் பின்னர், "மானம் ஒன்றே வாழ்வென கொண்டு" என்ற பாடலை பவித்திரா மகேந்திரன் அவர்களும் "அணையாத தீபமாய்..." என்ற பாடலை கேசினி சிவனேசன் அவர்களும் உணர்வுபூர்வமாக பாடினர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் தியாகதீபம் நினைவாக நடைபெற்ற இளையோர் பட்டறையில் கலந்துகொண்ட இளையோர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
இறுதியில், தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு உறுதிமொழியோடு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.

No comments:
Post a Comment